பக்கவாத நோயிலிருந்து உங்களை பாதுகாக்க தக்காளி சாப்பிடுங்கள்

பக்கவாத நோயில் இருந்து உங்களை நீங்களே பாதுகாக்க தக்காளி சாப்பிடுங்கள். பக்கவாத நோயை குணப்படுத்தும் திறன் தக்காளி பழ்த்துக்கு உள்ளது என புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

தக்காளி, சிகப்பு குடமிளகாய் மற்றும் தர்பூசணி ஆகியவற்றில் இருக்கும் லைகோபீன் என்கிற வேதிப்பொருள் பக்கவாத நோயை தடுக்கும் தன்மை உடையது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

பக்கவாத நோய் குறித்து பின்லாந்தில் உள்ள மருத்துவ விஞ்ஞானிகள் குழு 1031 ஆண்களிடம் ஆய்வு மேற்கொண்டனர்.

பரிசோதனையின் தொடக்கத்தில் இவர்களின் ரத்தத்தில் இருக்கும் லைகோபீன் என்கிற வேதிப்பொருளின் அளவு கணக்கிடப்பட்டது.

ரத்தத்தில் லைகோபீன் அளவு எவ்வளவு இருக்கிறது என்கிற அடிப்படையில், இவர்களை நான்கு தனித்தனி குழுக்களாக பிரித்த ஆய்வாளர்கள், இந்த நான்கு குழுக்களையும் 12 ஆண்டுகள் தொடர்ந்து கண்காணித்தனர்.

இதில் ரத்தத்தில் லைகோபீனின் அளவு மிகக்குறைவாக இருந்த குழுவில் 258 பேர் இருந்தனர். இவர்களில் 25 பேருக்கு பக்கவாதநோய் தாக்கியது. அதேசமயம், லைகோபீனின் அளவு ரத்தத்தில் அதிகம் இருந்த குழுவில் இருந்த 259 பேரில் 11 பேருக்கு மட்டுமே பக்கவாதநோய் தாக்கியது.

இதன் அடிப்படையில், லைகோபீன் அதிகம் இருக்கும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை சாப்பிடுவதன் மூலம் பக்கவாதநோய் தாக்குவதை 55 சதவீதம் குறைக்க முடியும் என்று இந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

தக்காளியில் இருக்கும் லைகோபீன் என்கிற வேதிப்பொருள் ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது என்றும், இது ரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்துவதன் மூலம் ரத்தக் கட்டிகள் உருவாகாமல் தடுக்கும் தன்மை கொண்டது என்றும் கிழக்கு பின்லாந்து பல்கலைக்கழக பேராசிரியர் ஜவ்னி கார்ப்பி கூறியுள்ளார்.

எனவே இந்த லைகோபீன் அதிகம் இருக்கும் தக்காளி போன்ற காய்கறிகளை அன்றாட உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் பக்கவாதநோயை தடுக்கலாம் என்பதை இந்த ஆய்வு சுட்டிக் காட்டுகிறது.


Posted

in

by

Tags: